நெல் அறுவடையின்போது, மனிதம் அறுவடையாக்கப்பட்ட உடும்பன்குளத்தின் சோகம்


சிறிலங்காப் படைகளும், அதன் காடையர் கும்பலும் இணைந்து நடாத்திய கொடிய சித்திரவதைகளையும், கோரக்கொலைகளையும் கண்டது கிழக்கு மாகாணம். பல தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்தும் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்த அதேவேளை, பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியும் வீடுகளோடு சேர்த்து எரித்தும் கொன்றுள்ளனர். ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகளின் மரண ஓலம் இன்றுவரை கிழக்கு மாகாணக் காற்றிலே கலந்திருக்கின்றது. அவ்வாறான படுகொலைகளின் சான்றுகளில் ஒன்றாக, 19.02.1986 ஆம் நாள் அமைந்திருக்கிருக்கின்றது. வளமான கிராமமான உடும்பன்குளத்தில் நடந்தேறிய படுகொலையின் வடுக்கள் இன்னும் ஆறாத ரணமாக அந்த மக்களின் மனதில் படிந்திருக்கின்றது.

உடும்பன்குளம்,அம்பாறை மாவட்டத்தில், வயல் நிலங்களையும் மலைகளையும் அழகான அருவிகளையும் ஒருங்கே கொண்டு அமையப் பெற்ற பசுமைக் கிராமம். விவசாயம் கிராமத்தின் முதன்மைத்தொழில். பருவகாலத்திற்கு ஏற்ப, இயற்கையோடு அமைந்த வாழ்க்கை முறையைப் பின்பற்றி வந்தவர்கள் இக்கிராமத்து மக்கள். வயல்விதைப்பு மற்றும் அறுவடைக்காலங்களில் தங்கள் குடும்பத்துடன் சென்று அருகில் உள்ள மலைகளின் அடிவாரங்களில் தங்கியிருந்து தொழில் செய்வது வழமை. அக்காலப்பகுதியில் தங்கள் உணவுத் தேவைக்கு மலைகளில் உள்ள மேடுகளில் சோளம், வெண்டி, கீரை போன்றவற்றைப் பயிரிட்டும் அருகில் உள்ள குளத்தில் மீன்களை பிடித்தும் உணவாக்கிக் கொள்வார்கள். நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தற்காலிக கொட்டகை அமைத்து வயல் வேலைகள் முடியுமட்டும் அங்கேயே தங்கியிருந்து, தமது அறுவடையினை முடித்துக்கொண்டு நெல் மூட்டைகளுடனேயே திரும்புவது வழக்கம்.

இவ்வாறே 1986ஆம் ஆண்டும், மலையடிவார வயல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது பிள்ளைகளுடன் தங்கியிருந்து வயலில் அறுவடை செய்து கொண்டிருந்தார்கள். 1986.02.19 அன்று, கொண்டை வெட்டுவான் இராணுவ முகாமிலிருந்து கவச வாகனங்களில் வந்த இராணுவத்தினரால், வயல் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களும் இங்கு தங்கியிருந்தவர்களும் பெண்கள், குழந்தைகள் உட்பட சுற்றி வளைக்கப்பட்டார்கள்.

வாகனங்களில் இருந்து குதித்த இராணுவத்தினர், சுற்றிவளைத்துக் கைது செய்யப்பட்டவர்களை வெறித்தனமாகக் கொடுமைப்படுத்தினர். கைகளையும் கண்களையும் கட்டிவிட்டு மண்வெட்டியால் வெட்டினார்கள். கைது செய்யப்பட்ட பெண்களை கூட்டாகப் பாலியல் வல்லுறவு செய்தார்கள். ஆண்களின் ஆண் உறுப்பை, நெல் அறுவடை செய்யும் அரிவாளால் வெட்டி எறிந்தார்கள். முதியவர், குழந்தைகள் வேறுபாடின்றி அனைவரும் மிகவும் மோசமான முறையில் துன்புறுத்தப்பட்டார்கள். பலர், இராணுவத்தினரின் துன்புறுத்தல்களைத் தாங்க முடியாது உயிரிழந்தார்கள். எஞ்சியிருந்தவர்களைச் சுட்டும், வெட்டியும் படுகொலை செய்ததுடன், அவர்களது உடல்களை, அறுவடை செய்யப்பட்ட நெற்சூட்டினுள் ஒன்றாகப் போட்டு எரித்தார்கள்.

இராணுவத்தின் வெறியாட்டத்தில், வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள், வாடியில் தங்கியிருந்தவர்கள் என நூற்றுமுப்பத்துமூன்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தார்கள். இவர்களில் ஒரு சிலர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியிருந்தார்கள்.இரண்டு நாட்கள் கழித்து 21.02.1986 அன்று அயற்கிராமத்தைச் சேர்ந்தவர்கள், வணபிதா சந்திரா பெர்ணான்டோ, நாளேட்டாளர்கள் ஆகியோர் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று, அரைகுறையாக எரிந்த நிலையிலிருந்த தொண்ணூற்றெட்டுப் பேரினது உடல்களை எடுத்து அடக்கம் செய்தார்கள்.

உடும்பன் குளத்தில் வயல்களில் அறுவடை செய்து கொண்டிருந்தவர்கள் மீதான தாக்குதலை நடத்திய இராணுவத்தினருக்குப் பொறுப்பாக லெப்டினன்ட் சந்திரபால தலைமை தாங்கினார். இச்சம்பவத்தில் இராணுவத்தினருடன் முஸ்லீம் குழுக்களும் இணைந்து தாக்குதல்களை நடத்தியிருந்தார்கள்.

அன்றைய சம்பவத்தில் படுகாயமடைந்த சியாமளா என்ற சிறுமி (அன்று நான்கு வயது) பின்னர் போராளியாக களத்தில் நின்றபோது அச்சம்பத்தை நினைவுகூர்ந்தார். அன்றைய நாளில், தனது உறவுகளை இழந்த நிலையில் அப்பம்மாவின் அரவணைப்பில் வாழ்ந்தவர். 


நாங்கள் 1986 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அக்கரைப்பற்றில் வசித்து வந்தோம். எங்களுக்கு உடும்பன்குளத்தில் 15 ஏக்கர் வயல் நிலம் உள்ளது. அதில் முழுதாக விவசாயம் செய்து வந்தோம். அறுவடைகாலம் என்பதால் அதற்குத் தேவையான பொருட்களை ஒழுங்கு படுத்தியபின் எங்கள் அப்பாவின் இரண்டு உழவு இயந்திரத்தில் நாங்கள் அனைவரும் உடும்பன் குளத்திற்குச் சென்று மலைகளில் வாடிகள் அமைத்து இருந்தோம். எங்களோடு அப்பப்பா, அப்பம்மா, அப்பா, அம்மா, இரண்டு சித்தப்பாமார் வேறு உறவினர்களும் வந்தார்கள். ஆண்கள் அனைவரும் வயலில் அறுவடைக்குச் செல்வார்கள். பெண்கள் மலையில் உள்ள வாடியில் எங்களுக்குத் தேவையான உணவுகளைச் செய்வார்கள்.


இவ்வாறு அன்று வழமையான வேலைகளைச் செய்து கொண்டிருக்கையில் மதியம் உணவு உண்பதற்காக அப்பா எல்லோரையும் அழைத்து 'எல்லோரும் சாப்பிட போங்க நான் சுடுகளுக்கு காவல் நிக்கிறன்" என்று சொன்னார். உடனே எல்லோரும் மலைகளுக்கு சென்று விட்டோம். அக்காலப்பகுதியில் எனது சித்தப்பா கோபால கிருஸ்ணன் (கண்ணா) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எடுத்து விட்டு இருந்தபடியால் அந்த இடைவெளியில் அவரும் எங்களோடு வந்தவர். அவர் சாப்பிட்டுவிட்டு, மலையில் மறுபக்கத்தில் படுத்து நித்திரையாகி விட்டார்.


கிராமத்தை சுற்றிவளைத்த ஆமி வயலுக்கு வந்து 'டேய் எங்க எல்லாரும்" என்று கேட்க, அப்பா 'எல்லோரும் மலையில் சாப்பிடினம்" என்று சொன்னார். அப்ப, ஆமியோடு வந்த முஸ்லிம் ஒருத்தன் அப்பாவை நன்றாகத் தெரிந்தவன் கத்தியால் வயிற்றில் குத்திவிட்டான். உடனே அப்பா 'கண்ணா ஓடு கண்ணா ஓடு" என்று சித்தப்பாவின் பெயரைச் சொல்லி கத்தினார் அப்பதான் எல்லாரும் பார்த்தால் அப்பாவை இரத்த வெள்ளத்தில் அருகில் ஓடிக்கொண்டிருந்த அருவிக்கரையில் தூக்கிப் போட்டிருந்தார்கள். பின்னர், மலையில் இருந்த ஏனையோரையும் கைசெய்து வயலுக்குகொண்டு வந்தார்கள். அதில் ஆண்களை கண்களையும் கைகளையும் கட்டி அடிக்கத் தொடங்கினார்கள். அப்போது பெண்களை ஓடச் சொல்ல, ஓடும் போதுதான் இராணுவத்தினரின் தாக்குதலில் நான் காலில் படுகாயமடைந்தேன்.


ஆண்களில், எங்கள் உறவினரான வாய்பேச முடியாத அண்ணையை இராணுவத்தினர் கண்களை கட்டி விட்டு ஓடச்சொன்னார்கள். அவர் உடனே ஓடி வந்து மிகுதிப்பேருக்கு என்ன நடக்குது என்று மலைப்பகுதியில் இருந்து பார்த்தார். இராணுவத்தினர் எல்லாரையும் அடிப்பதையும் வெட்டுவதையும் துப்பாக்கியால் சுடுவதையும் பார்த்த இவர் கண்ட காட்சி இவரை கதிகலங்க வைத்தது. எனது அப்பா அப்போது இறக்கவில்லை அப்படியே காயத்துடன் தான் இருந்தவர் எங்கள் உளவு இயந்திரத்தில் எல்லோரையும் போட்டு எரித்துவிட்டார்கள்.


அறுவடை முடிந்த பின்பு நாங்கள் அக்கிராமத்தில் உள்ள ஏழைமக்களுக்கு தானமாக நெல் கொடுப்பது வழமை. அன்றும் தானம் பெறவந்த பல மக்கள் இதில் படுகொலை செய்யப்பட்டார்கள். இச்சம்பவத்தை மறைந்திருந்து  பார்த்த வாய்பேச முடியாத அண்ணையே ஊருக்குள் வந்து சொன்னார். ஆனால் அவருடன் பழகிய எங்கள் உறவினர்களுக்கு அவர் அங்கு என்ன நடந்தது என்று செய்து காட்டிய பின்தான் விடயம் ஊருக்குள் தெரியவந்தது.


இப்பொழுதும், அப்பாவையும் மற்றவர்களையும் போட்டு எரித்த உழவு இயந்திரத்தின் எரிந்த பாகங்கள் இப்படுகொலையின் சாட்சியாய் எங்கள் வீட்டில் உள்ளது. காயமடைந்து அக்கரைப்பற்று வைத்திய சாலையில்தான் சிகிச்சை பெற்றேன். அவ்வைத்தியசாலை தற்பொழுது சிறிலங்கா இராணுவத்தின் அதிரடிப்படை முகாகமாக மாற்றப்பட்டிருக்கிறது" என்று தனது கடந்தகால வடுக்களை கண்ணீருடன் பகிர்ந்தார். 

உடும்பன்குளத்தில், 19.02.1986 அன்று கொன்று எரிக்கப்பட்டோர் விபரம்

01. இராசையா தவேந்திரன்.......................................18
02. இராமசாமி கந்தையா............................................48
03. ந.கோபாலகிருஸ்ணன்
04. ந.விநாயகமூர்த்தி
05. க.பாக்கியராசா
06. கதிரேசபிள்ளை வைரமுத்து
07. குமரவேல் நாகராசா...............................................27
08. கணேசமூர்த்தி பேரின்பன்...................................28
09. கணேசபிள்ளை மோகனராசா............................22
10. கணபதி வடிவேல்....................................................27
11. பத்மநாதன்
12. மைலன் தியாகராசா...............................................18
13. தர்மன்............................................................................22
14. தாசப்பு செபமாலை 
15. தாசப்பு செல்லையா 
16. துரை இராமலிங்கம் 
17. தம்பிப்பிள்ளை குமாரவேல் 
18. மயில்வாகனம் தியாகராசா................................13
19. மார்க்கண்டு ரவீந்திரன் 
20. முத்துப்போடி சுமனாவதி 
21. முத்துசாமி முத்துலிங்கம் 
22. மசன்னா ஜெயராஜ் 
23. ஆ.நல்லதம்பி 
24. ஆ.சோமசுந்தரம் 
25. பொன்னன் இராசதுரை 
26. பொன்னம்பலம் யோகராசா..............................18
27. சோமசுந்தரம் கருணாநிதி..................................21
28. வெங்கிட்டன் குழந்தை 
29. ஞானமுத்து புவனேந்திரன் 
30. சுந்தரம் சின்னவன்.................................................20
31. சீனித்தம்பி 
32. சீனித்தம்பி தவநாகன்...........................................30
33. சீனித்தம்பி அருள்செல்வன்...............................18
34. சில்வஸ்ரார் இன்னாச்சி......................................32
35. சுவாமி டேவிட்.........................................................29
36. வயிரமுத்து சுந்தரலிங்கம்
37. வர்ணகுலசிங்கம் புண்ணியமூர்த்தி...............21
38. விஸ்வகேது இராசா..............................................23
39. ரங்கன் போல்

குறிப்பு :- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 கருத்துரைகள் :

  1. புலிகள் தமிழ் இன விடுதலைக்கு போராடினார்களா? இல்லை தங்கள் ஏகாதிபத்தியத்திற்காக போராடினார்களா? என்பதை வரலாற்றை நோக்கினால் உங்களுக்குத் தெரியும்.

    1987ம் ஆண்டு ஜுன் மாதம் இரண்டாம் திகதி புலிகளின் ரக் வண்டிகள் யாழ்பாணத் தெருக்களில் நிறுத்தப்பட்டு அங்கு வாழ்ந்துவந்த முஸ்லீம்களை உடனடியாக றஹ்மானியா கல்லூரியில் ஒன்று கூடுமாறு கேட்கப்பட்டனர்

    ஒன்று கூடிய மூஸ்லீம்கள் அனைவரும் இரண்டு மணிநேர அவகாசத்தில் தாங்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த பூர்வீக பூமியை விட்டு வெளியேறுமாறு கேட்கப் பட்டதுடன் அவர்கள் உடுத்திருந்த உடுப்பை தவிர ஐம்பது ரூபாய் பணம் மட்டும் எடுத்துச் செல்ல அனுமதிக்கபட்டனர்.

    முஸ்லிம் மக்களின் வீடுகள் ,வியாபார ஸ்தலங்கள் மற்றும் நிலங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. மேலும் முஸ்லிம் பெண்கள் அணிந்திருந்த நகைகள் (கையில், காதில் மூக்கில், கழுத்தில் அணிந்திருந்த சிறு சிறு நகைகள் உட்பட) அனைத்துமே பயங்கரவாத விடுதலைப்புலிகளினால் கொள்ளையடிக்கப்பட்டன

    ஏறாவுறில் அமைந்துள்ள சதாம் ஹூசைன் கிராமத்தில் நடுநிசியில் தூங்கிக் கொண்டிருந்த முஸ்லீம் மக்களை ஊருக்குள் புகுந்து வெட்டியும் சுட்டும் கொன்றனர்

    • இதில் 31 சிறார்கள், 27 தாய்மார்கள் 115 ஆண்களும் அடங்குவர்.

    • இச் சம்பவத்தின்போது ஒரு கற்பிணித் தாயின் வயிற்றைக் கிழித்து அதனுள்ளிருந்த குழந்தையை வெளியெடுத்து அதையும் வெட்டியதுடன் தாயின் வயிற்றில் அம்மிக் குழவியை வைத்திருந்தனர்.

    ReplyDelete